
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமட்டி பகுதியில் பி. முட்லூர் நாகவல்லி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 55) என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயார் செய்யும் குடோன் உள்ளது. அரசு உரிமம் பெற்று அவர், நாட்டு வெடி தயார் செய்து, விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் பி. முட்லூர் நாகவல்லி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் மனைவி லதா உள்ளிட்ட 4 பேர் இன்று (15.06.2025) பணிக்கு சென்றுள்ளனர். அப்போது நாட்டு வெடி தயார் செய்யும் குடோன் அருகே வெடி மருந்து இருப்பு வைத்திருக்கு சிறிய அளவிலான ஓட்டுக் கட்டிடம் உள்ளது.
இதில் இன்று மதியம் வெடி தயார் செய்யும் குடோனில் பணியில் இருந்த வசந்தியும், லதாவும் வெடி மருந்து எடுக்க வெடி மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த ஓட்டு கட்டடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது வசந்தி டீ குடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் லதா மருந்து இருப்பு வைத்திருக்கும் ஓட்டுக் கட்டடத்துக்கு சென்று பையில் வெடி மருந்தை எடுத்துக் கொண்டு வரும் போது எதிர்பாராத விதமாக வெடி மருந்து எடுத்து வந்த பை கீழே விழுந்துள்ளது. இதில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஓட்டுக் கட்டிடம் தரை மட்டமானது. இதில் லதா உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்த பரங்கிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று லதாவின் சிதறிய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் பரங்கிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துச் சென்று விபத்து நடத்த இடத்தில் தண்ணீரைப் பீச்சி அடித்தனர். அதோடு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் ஆகியோர் சம்ப இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்த வெடி விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த லதா குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.