கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் பலி; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

CM MK Stalin obituary Woman devotee stampede incident 

ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய இலவச தரிசன டோக்கன் வாங்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று (08.01.2025) குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நிகழ்ந்த தள்ளு முள்ளால் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும் 5 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் வாங்குவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளிவில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள செய்திக்குறிப்பில், “சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி மல்லிகா (வயது 55) நேற்று (08.01.2025) ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துயரமான செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் உடனடியாகத் தெரிவித்துக் கொண்டார். அதோடு, உயிரிழந்த மல்லிகாவின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Salem Tirupati woman
இதையும் படியுங்கள்
Subscribe