இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.06.2025) கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், “இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்கிறேன்.

Advertisment

இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுடன் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் இன்று (29.06.2025) சிறை பிடித்துள்ளனர். இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும், நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். 

வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளனர். மீன்பிடி தொடர்பான பிரச்சனைகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்”என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே கைது கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் மன்னார் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மீனர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதின்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.