
மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வேளாண்த்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும்.
மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI - Food Safety and Standards Authority of India) தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிட வேண்டும். மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் (PM-AASHA) சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் (MIS) செயல்படுத்தவும் வலியுறுத்தியும் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகார் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.