/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-sad-art_20.jpg)
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (12.12.2024) இரவு 09.30 மணியளவில் தீ விபத்தில் நிகழ்ந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், “திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12.12.2024) இரவு 09.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (வயது 30), மாரியம்மாள் (வயது 50), தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (வயது 50), சுப்புலட்சுமி (வயது 45), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 36) , கோபிகா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)