இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் பெரிய அளவில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் ஊரடங்கால் ஏழைமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கனமழையுடன் சேர்ந்து வீசிய சூறைக்காற்றால் பல்லாயிரக்கணக்கான வாழைகள் தரைமட்டமானதுடன், மற்ற விவசாயங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு விவசாயிகள் செலுத்தும் விளைப்பொருட்களுக்கான கிடங்கு வாடகைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விளைப்பொருட்கள் கிடங்கிற்கான மேலும் ஒரு மாத வாடகையை விவசாயிகள் செலுத்தத் தேவையில்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.