Skip to main content

"அரசின் அறிவிப்புக்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

cm edappadi palaniswami pressmeet at chennai chief secretariat

 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கையின் படி, ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் அளிக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லித்தான் நான் ரத்து செய்ததாக அவர் பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகிறார். அரசு அறிவிக்கவுள்ளதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஸ்டாலின் அதை அறிவித்துவிடுகிறார். மக்களுக்கு எந்த காலகட்டத்தில் உதவிச் செய்ய வேண்டுமோ, அதை அந்தந்த காலத்தில் செய்கிறோம். 

 

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 6 சவரன் வரையான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளேன். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களும் கடன் வாங்கித்தான் மக்களுக்கு உதவி செய்கின்றன. எந்த மாநிலங்களும் பணத்தை வைத்துக் கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது. அரசின் அறிவிப்புகளுக்கும், தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை அரசு நிறைவேற்றும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் தி.மு.க. குரல் கொடுக்கவில்லை; தேர்தல் வந்தால் குரல் கொடுப்பார்கள். 

cm edappadi palaniswami pressmeet at chennai chief secretariat

 

2011-ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்ததாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினே தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் ஏறிய விலைவாசிக்கு ஏற்ப, இப்போது ரூபாய் 5.7 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இ-டெண்டரில் எப்படி முறைகேடு செய்ய முடியும்? எங்கிருந்து வேண்டுமானாலும் இ-டெண்டர் எடுக்கலாம். மின்னணு முறை டெண்டர் விடுவதில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என ஏற்கனவே தெளிவுப்படுத்தினேன். ரூபாய் 40,000 கோடிக்கு டெண்டர் என்றால் உடனடியாக முழு தொகையையும் செலவிட்டுவிடுவதில்லை. அரசியலுக்காக டெண்டரில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். விவசாயக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் 75% விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. 

 

பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருக்கிறோம். இயற்கைச் சீற்றங்கள், கரோனா பாதிப்பு ஆகிய சோதனைகளிலும் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளுக்கு கரோனா காலத்தில் ரூபாய் 1,000 நிதியுதவி, பொங்கலுக்கு ரூபாய் 2,500 நிதியுதவி அளித்தோம். பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும்." இவ்வாறு முதல்வர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.