டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. இன்று நடைபெற்ற போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோல் ஏற்கனவே 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றிருந்த அவனி லெகாரா, இன்று நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார். அதன் தொடர்ச்சியாக தற்போது ஹர்விந்தர் சிங், ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தையில் வெண்கலம் வென்றார். இந்நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், " வேளாண் குடும்பத்தில் பிறந்து பல தடைகளை கடந்து பாராலிம்பிக்ஸில் பதக்கம வெல்லும் முதல் வில் வித்தை வீரராக உயர்ந்துள்ள ஹர்விந்தர் சிங், சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார். வெண்கலம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.