Skip to main content

துப்புரவுப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து பலி; நாகையில் அவலம்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Cleaner passed away by electrocution in Nagapattinam

 

நாகை கோட்டைவாசல் அருகே  நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளைக் கொட்டச் சென்ற டிப்பர் லாரி மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில், தொழிலாளர் ஒருவர் பரிதாபமாகப் பலியான சம்பவம் பலரையும் பதைபதைக்க செய்துள்ளது.  

 

நாகை அடுத்த நாகூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் விஜய். 26 வயதான விஜய்க்கு மஞ்சு என்கிற மனைவியும் 1 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நாகை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் விஜய் வழக்கம்போல இன்று காலை பணிக்கு சென்று, நாகை அண்ணா சிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக துப்புரவு பணியாளர்களுடன் குப்பைகளை சேகரித்து குப்பை ஏற்றும் டிப்பர் லாரி வாகனத்தில் குப்பைகளை கொட்டச் சென்றுள்ளார். 

 

நாகை கோட்டைவாசல்படி பகுதியில் உள்ள நாகை நகராட்சி குப்பை உரக்கிடங்கில் டிப்பர் லாரி மூலம் குப்பையைத் தூக்கி கொட்டும் பொழுது மேலே இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் வாகனத்தின் மேல் பகுதி உரசி மின் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் மீது கை வைத்த தூய்மை பணியாளரான விஜய் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தில் இருந்த ஓட்டுநர் ஜோதியும் படுகாயம் அடைந்தார்.

 

நகராட்சி ஓட்டுநரான கும்பகோணத்தைச் சேர்ந்த ஜோதி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உயிரிழந்த விஜயின் சடலத்தை கைப்பற்றிய நாகை நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விஜயின் சடலத்தை பார்த்த மனைவி மற்றும் அவரது உறவினர்கள் , சக தூய்மை பணியாளர்கள் பச்சிளம் குழந்தையை வைத்துகொண்டு கதறி அழுத காட்சி காண்போரை பதைபதைக்க செய்தது. 

 

இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு பணியின் போது உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு இழப்பீடும் தமிழக அரசு நிரந்தர வேலையும், நாகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாக பணியமர்த்த வேண்டியும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அரசு மருத்துவமனை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து அங்கு வந்த நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து நாகை நகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். 

 

நாகையில் குப்பைக் கொட்ட சென்ற துப்புரவுப் பணியாளர் ஒருவர்  மின்சாரம் பாய்ந்து பலியானதும், மற்றொருவர் படுகாயம் அடைந்த நிகழ்வும் சக நகராட்சி தொழிலாளர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.