Skip to main content

வாலிபால் விளையாட்டில் ஏற்பட்ட பகை; பழி தீர்த்த பள்ளி மாணவன் - சிவகங்கையில் நடந்த பயங்கரம்!

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Class 12 student passed away in Sivagangai

 

சிவகங்கை மாவட்டம் சாத்திரசன் கோட்டையில் அமைந்துள்ளது மல்லல் ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். 17 வயதான இவர், மல்லல் ஊராட்சி அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். திருமுருகனுக்குத் தனது ஊருக்குள் ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர்.

 

அவர்களுடன் சேர்ந்து சாத்திரசன் கோட்டையில் உள்ள மைதானத்தில் வாலிபால் விளையாடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மே மாதத்தில் வழக்கம்போல் திருமுருகன் தனது நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய உறவுக்கார பையனான 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும், இவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்.

 

அந்த சமயம், மாணவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் திருமுருகனுக்கும் அவருடைய உறவுக்கார பையனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த மாணவன் திருமுருகனை ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமுருகன், அந்த மாணவனைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அன்றைய நாள் ஏற்பட்ட பகை, மாணவனின் நெஞ்சில் நஞ்சை விதைத்தது. அதில், நாளுக்கு நாள் திருமுருகன் மீது ஏற்பட்டிருந்த கோபம் ஒருகட்டத்தில் வெறியாக மாறியுள்ளது. பள்ளி படிப்பை விட்டுப் பகையை வளர்க்கத் துணிந்தான் அந்த மாணவன்.

 

இத்தகைய சூழலில், திருமுருகன் தன்னைத் தாக்கியது குறித்து தனது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவனுடன் சேர்ந்த கூட்டாளிகள் திருமுருகனைக் கொலை செய்ய முடிவு செய்திருந்தனர். இதற்கிடையில், கடந்த 26 ஆம் தேதியன்று திருமுருகன் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு அன்று மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மேலும், மரக்குளம் பஸ் ஸ்டாப்பிற்கு அருகே திருமுருகன் வந்துகொண்டிருந்தபோது, அவரை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளனர்.

 

அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த முன்விரோத மாணவன், திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, இவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்படவே, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு திருமுருகனின் தலையிலேயே வெட்டியுள்ளனர். மேலும், பழிக்குப் பழி வாங்கிய மாணவன் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

 

ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த திருமுருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அங்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த திருமுருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை தாலுகா போலீசார், திருமுருகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 7 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, முக்கிய குற்றவாளியான பள்ளி மாணவனையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தற்போது, முன்விரோதத்தால் ஏற்பட்ட பகையில் பள்ளி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மக்களைக் குலை நடுங்க வைத்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.