
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதனை பூர்த்தி செய்து, நாளை காலை 11 மணி முதல் வரும் சனிக்கிழமை மாலை 5 மணி வரை, சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.