
சேலத்தில், திமுக மேயருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் துணை மேயருக்கும் இடையே, நீறு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த மோதல் விவகாரம், பொதுவெளியில் அப்பட்டமாக அம்பலப்பட்டுப் போனதுதான் இப்போதைக்கு இரு கட்சியினரிடமும் பரபரப்பு பேச்சாகி இருக்கிறது.
சேலம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இவர் தலைமையில் மே 25ம் தேதி, மாநகராட்சிப் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்டூ பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா, நேரு கலையரங்கத்தில் நடந்தது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். இந்த விழாவிற்கு வந்திருந்த துணை மேயரான காங்கிரஸைச் சேர்ந்த சாரதா தேவி, மேயருக்கு அருகில் போடப்பட்டு இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார். அழையா விருந்தாளியாக வந்ததோடு, நம் பக்கத்திலேயே அமர்ந்து விட்டாரே என்று எண்ணிய மேயரின் முகம் கறுத்துப் போனது.
மேயர், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், கல்வி அலுவலர் ஆகியோர் பேசிய பிறகு சாரதா தேவியை பேசும்படி அழைத்தனர். உடனே குறுக்கிட்ட மேயர் ராமச்சந்திரன், 'அவரெல்லாம் பேசக்கூடாது. பேச வேண்டியவங்க எல்லாம் பேசியாச்சு. அவரை உட்காரச் சொல்லுங்க. இனிமே பரிசளிப்பு நிகழ்ச்சிதான்...,' என்று மேடையிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சாரதாதேவி, மேடையில் அமர்ந்து இருந்த ஆணையர் இளங்கோவன் அருகில் சென்று, 'பலர் முன்னிலையில் மேயர் என்னை அவமானப்படுத்தி விட்டார். நாளைக்கு எப்படி மாநகராட்சி ஊழியர்கள், கட்சிக்காரர்கள் முகத்தைப் பார்ப்பது?,' என்று சொல்லிவிட்டு, விழா அரங்கத்தில் இருந்து 'விருட்'டென்று வெளியேறினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த 2022ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்த பிறகு, சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரனும், துணை மேயராக சாரதா தேவியும் பதவியேற்றனர். அப்போது இருந்தே இருவருக்கும் ஏழாம் பொருத்தம்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அப்படி என்னதான் இருவருக்கும் வாய்க்கால் தகராறு என்பது குறித்து திமுக உடன்பிறப்புகளிடம் விசாரித்தோம்.

''சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 48 இடங்களை வென்றுள்ள திமுகவுக்குதான் மேயர், துணை மேயர் ஆகிய இரு பதவிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. மேயர் பதவிக்கு ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அஸ்தம்பட்டி மண்டலக்குழுத் தலைவராக இருக்கும் கவுன்சிலர் உமாராணிக்கு துணை மேயர் பதவி கிடைக்கும் என்ற பேச்சு இருந்தது. அவரும் அதற்காக நிறையவே மெனக்கெட்டார்.
ஆனால் உமாராணிக்கும், அப்போது சேலம் மத்திய மா.செ.வாகவும், எம்.எல்.ஏ.வாகவும் மட்டும் இருந்த இப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கும் சில விவகாரங்களில் உரசல் இருந்தது. அதனாலேயே துணை மேயர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தார் மா.செ., இந்தப் பதவியைக் குறிவைத்து சாரதாதேவியும், அப்போதைய காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மூலமாக அறிவாலயம் வரை காய் நகர்த்தினார். அதன்பிறகுதான் சாரதாதேவி துணை மேயர் ஆனார். அப்போதே மேயர் உள்ளிட்ட பலருக்கும் இதில் அதிருப்தி ஏற்பட்டது.
அதையடுத்து, மாமன்ற கூட்டங்களில் மேயர் இருக்கைக்கு அருகிலேயே துணை மேயருக்கும் தனி இருக்கை போட வேண்டும் என்று சாரதாதேவி அடம் பிடித்தார். மாநகராட்சிகள் சட்டத்தில் இதற்கு இடம் இல்லை என்றும், துணை மேயர் என்பவரும் சாதாரண கவுன்சிலர்தான் என்றும் மேயர் ராமச்சந்திரன் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் அமைச்சர் கே.என்.நேரு வரை சென்றது. அவரோ, 'இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? துணை மேயருக்கும் ஒரு நாற்காலி போட்டுட்டுப் போங்களேன்யா...,' என்று கூறிவிட்டார். இதில் எல்லாம் மேயருக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. அதனால், அமைச்சர் கே.என்.நேருவின் உத்தரவையும் மீறி, அடுத்தடுத்த சில மாமன்ற கூட்டங்களில் சாரதாதேவிக்கு மேயரின் அருகில் இருக்கை போடப்படாமல், மற்ற கவுன்சிலர்கள் வரிசையிலேயே அமர வைக்கப்பட்டார்.
இதன்பிறகும் சாரதாதேவி, மேயருக்கு வழங்கப்பட்டதுபோல் தனக்கும் தனி கார், தனி அலுவலக அறை வேண்டும் என்றும் கேட்டார். பல அதிருப்திக்குப் பிறகு அந்த வசதிகளும் செய்து தரப்பட்டன. இதற்கிடையே, சாரதாதேவிக்கு தனி இருக்கை வழங்கக்கூடாது என்று திமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சி கவுன்சிலர் மூலமாக தீர்மானம் கொண்டு வர மேயர் முயற்சி செய்தார். அதுவும், அமைச்சர் கே.என்.நேரு தலையிட்ட பிறகே முறியடிக்கப்பட்டது. இருப்பினும், துணை மேயரை எந்த ஒரு அரசு நிகழ்ச்சிக்கும் மேயர் அழைப்பதில்லை. இந்த நிலையில்தான் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் மேயர் ராமச்சந்திரன், துணை மேயரை மேடையிலேயே வைத்து அசிங்கப்படுத்தி இருக்கிறார்.” என்கிறார்கள் திமுகவின் மூத்த உ.பி.,க்கள்.

இது தொடர்பாக துணை மேயர் சாரதாதேவியிடம் கேட்டோம்... “சேலம் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவிற்கு வருமாறு ஆணையர் அழைத்ததன் பேரில்தான் கலந்து கொண்டேன். விழா மேடையில் மேயர் அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் நான் அமர்ந்ததையே அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. நான் மேடையில் பேச எழுந்தபோது, 'இது, நான் நடத்தும் நிகழ்ச்சி துணை மேயருக்கு பேச அனுமதி இல்லை,' என்று மேயர் வெளிப்படையாகவே கூறினார். மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க முயன்றபோது அதையும் தடுத்தார் மேயர். எல்லோர் முன்னிலையிலும் அவர் அப்படிச் செய்தது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே இப்படிதான் தொடர்ந்து அவமானப் படுத்தி வருகிறார். ஆய்வுக்குச் சென்றாலோ, மாநகராட்சி சார்பிலான நிகழ்ச்சிகளுக்கோ கூட இதுவரை அழைத்ததில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் நானும் இதையெல்லாம் சகித்துக் கொண்டு போகிறேன்.
சொந்த நிகழ்ச்சி என்றால் எதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சியின் இலச்சினைகளையும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் படங்களையும் ஏன் மேயர் பயன்படுத்துகிறார்? இது குறித்து எங்கள் கட்சித் தலைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன்,'' என்று சரவெடியாக வெடித்தார் சாரதாதேவி.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கூறுகையில், ''மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழாவை தனிப்பட்ட முறையில் நடத்தி வருகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு சாரதாதேவியை நான் அழைக்கவில்லை. திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகளைக்கூட நான் அழைக்கவில்லை. இது முழுக்க முழுக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சி என்பதால்தான் மாநகராட்சி ஆணையர், மாவட்டக் கல்வி அலுவலர் தவிர வேறு எவரையும் பேச அனுமதிக்கவில்லை. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்து இருக்கிறோம்.
எனக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என திட்டம்போட்டு சாரதாதேவி இங்கு வந்து பிரச்னை செய்கிறார். இதன்மூலம் அவர் விளம்பரம் தேடிக்கொள்ளப் பார்க்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள்தான் அவரை ஜெயிக்க வைத்தோம். அதையெல்லாம் மறந்துவிட்டு என்னைப்பற்றி வெறும் பொய்யாக பேசுகிறார்” என்றார்.
பெண்களுக்கு சம உரிமை கிடைக்கப் பாடுபடும் திராவிட மாடல் அரசு என தமிழக முதல்வர் சொல்லி வரும் நிலையில், மாங்கனி மாநகராட்சியில் பெண் துணை மேயரை, ஆளுங்கட்சி மேயரே அவமானப்படுத்தலாமா? என இரு கட்சிக்குள்ளிருந்தும் கேள்விகள் கிளம்பி உள்ளன.