கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ளது விருத்தாசலம் நகர மத்திய கூட்டுறவு வங்கி. இந்த வங்கியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். வங்கியின் நிர்வாகக்குழு சிறப்பு கூட்டம் நேற்று (25.08.2029) நடைபெற்றது. வங்கி கூட்டுறவு சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சார்பதிவாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
தற்போது துணைத்தலைவராக உள்ள காமராஜ், முன்னராக தலைவராக இருந்த சமயத்திலேயே பல்வேறு முறைகேடு புகார்கள் அவர் மீது இருந்து வந்தது. அப்போழுதும் அவர் மீது அவநம்பிக்கை எழுந்ததால் அவர் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக கருதி அவரை துணைத் தலைவராக பதவியிறக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது துணைத்தலைவர் பொறுப்பிலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்க துணைத் தலைவர் காமராஜிடம் விளக்கம் கோரப்பட்டது.
அதற்கு அவர் அளித்த விளக்கம் போதுமான திருப்தியாக இல்லாததால் வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் கூறியவாறு வங்கியின் துணைத் தலைவர் காமராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தை வங்கியின் மேலாளர் ஏரோப்ஜான் வாசித்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் இயக்குனர்கள் ராஜேந்திரன், அருளாகரன், ரவிச்சந்திரன், தவச்செல்வி, தங்கவேல், அருண், ஆனந்தி, அண்ணாமலை மற்றும் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 9 பேர் கலந்துகொண்டு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். வாக்கெடுப்பின் முடிவில் துணைத் தலைவர் காமராஜ் துணைத் தலைவர் பதவியிலிருந்து தீர்மானத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வங்கியின் கூட்டுறவு சங்க தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பாலசுப்பரமணியனும், துணைத்தலைவராக காமராஜ் என்பவரும் இருந்தனர். இந்த நிலையில் காமராஜ் சமீபத்தில் அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க-விற்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.