Skip to main content

உத்தமசோழரின் பன்னிரெண்டாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கிளியூரில் கண்டுபிடிப்பு..!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டம் கிளியூரிலுள்ள சிவன்கோவில் கிணற்றின் அருகே சாய்த்துவைக்கப்பட்டுள்ள பலகைக்கல்லில் உத்தமசோழரின் பன்னிரெண்டாவது ஆட்சியாண்டில், அதாவது கி.பி 982 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருந்திருப்பது புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராஜேந்திரன் , நிறுவனர் ஆ.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார் சிங்கப்பூர் மாணவர் அ.பிரவீன் ஆகியோரடங்கிய குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

 

chola age inscription found in puthukottai

 

 

இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது, 
இக்கல்வெட்டு கோப்பரகேசரி என்ற பட்டமுடையசோழ மன்னர் உத்தம சோழர் (கி.பி 970 – 985 ) ஆட்சியின் பன்னிரெண்டாவது ஆண்டை சேர்ந்தது என்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைப்பு மற்றும் ஆண்டுக் குறிப்பைக் கொண்டு கோப்பரகேசரி பட்டம் கொண்ட பராந்தகச்சோழரின் கல்வெட்டாக இருக்குமோ என்றாலும், பராந்தகசோழர் தமது மூன்றாவது ஆட்சியாண்டிலேயே மதுரை கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டப்பெயர் கொண்டிருப்பதையும் இப்பதம் இக்கல்வெட்டில் இல்லாததையும் கருத்திற்கொண்டு  இது பட்டமுடைய  உத்தம சோழரின் காலத்தையது என்று கருத முடிகிறது.

கிளியூர்:
   இவ்வூர் தென்சிறுவாயில்நாட்டுப் பிரிவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பும் கிளியூர் என்றே அழைக்கப்பட்டுள்ளதையும் , இப்பகுதியில் வடசிறுவாயில் நாடு போல  தென்சிறுவாயில் நாடு இருந்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

மகாதேவர் செங்கல் தளி:
 கிளியூரிலிருந்த திருக்கோயில் இறைவன் மகாதேவர் என்ற பொதுப் பெயரிலேயே இருந்துள்ளார். அடையாளம் காணப்பட்ட கல்வெட்டு தனிக்கல்லில் இருப்பதன் மூலம் இது செங்கல் (தளி) கட்டுமானமாக இருந்திருக்கும் எனக் கருதலாம். மகாதேவரின் லிங்கம் மற்றும்  நந்தியையும் தவிர ஏனைய கட்டுமானங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வழிபாட்டிலுள்ளது..

கல்வெட்டின் அமைப்பு:

கல்வெட்டின் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் கால மாற்றத்தினால் சிதைந்துள்ளன . இது நான்கரை அடி  உயரம், இரண்டரை அடி அகலமுடையதாக உள்ளது. இக்கல்வெட்டில் 17 வரிகளில் கல்வெட்டுப்பொறிப்பும், அதன் கீழ் புறத்தில் சூல கோட்டுருவமும் காணப்படுகிறது. 

கல்வெட்டு சொல்லும் செய்தி இம்மகாதேவர்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிலம் இறையிலியாக வரிநீக்கித்தரப்பட்டுள்ளது. இந்நில வருவாயில் நாள் தோறும் திருவமிர்து படைக்க இருநாழி அரிசி தரப்பட்டுள்ளது. இந்நிலத்திற்கான வரி நீக்கத்தினை உள்ளூர் நிர்வாகத்தினரே செய்துள்ளனர். இறையாருக்கு நிலத்தை கொடையாக கொடுத்தவர் இன்னாரென்று அறிய முடியவில்லை என்றாலும்  சிறுவாயிநாட்டுபட்டன் என்பவரின் பெயர் இக்கல்வெட்டில் அறியப்படுவதால் அவரே நிலத்தை கொடுத்தவராகவோ அல்லது பெற்று இத்திருக்காரியத்தை செய்தவராக கருதலாம் .  

கல்வெட்டின் மூலம் அறியப்படும் வரலாறு:

தென்சிறுவாயி நாட்டில் உத்தம சோழர் ஆட்சிக்காலத்தில் வரி நீக்கிய இறையிலி நிலம் வழங்கப்பட்டதையும் இதனை உள்ளூர் நிர்வாகத்தினர் கூடி அறிவித்தமையையும் பார்க்க முடிகிறது, இதன் மூலம் ஊர் சபைகள் கோயில் நிர்வாகத்தில் பங்காற்றியமையை புரிந்து கொள்ள முடிகிறது இந்நிலத்தின் வருவாயின் மூலம் இறைவனுக்கு தினசரி பூசைக்கு உணவு படைக்க இரு நாழி அரிசி  வழங்கப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது   என்றார்

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.