Skip to main content

ஏலச்சீட்டு நடத்தி 15 கோடி ரூபாய் மோசடி; முதலீட்டாளர்களை மிரட்டிய ஏமாற்றுப் பேர் வழி! 

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

chit funds rs 15 crores police investigation

 

ஏலச்சீட்டு முதலீட்டுத் தொகை 15 கோடி ரூபாயை சுருட்டிய வடமாநில நிதி நிறுவன அதிபர், முதலீடு செய்தவர்கள் மீதே காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று நோட்டீஸ் அனுப்பி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் செவ்வாய்பேட்டையில் ராஜஸ்தான், பீஹார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பலர் மளிகை, பிளாஸ்டிக் பொருள்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், பேன்சி பொருள்கள் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதேநேரம் குறிப்பிட்ட சில வட இந்திய குடும்பத்தினர் ஏலச்சீட்டு நிறுவனம் உள்ளிட்ட நிதி நிறுவன தொழில்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்பேட்டை வெங்கடப்பன் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த பத்து ஆண்டுகளாக ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய பூர்வீகம், ராஜஸ்தான் மாநிலம் ஆகும். 

 

பிரகாஷிடம், அப்பகுதியில் வசிக்கும் ராஜஸ்தானிய குடும்பத்தினர், உள்ளூர்க்காரர்கள் என 150- க்கும் மேற்பட்டோர் சீட்டு திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். சீட்டு திட்டம் முதிர்வு அடைந்த பிறகும் கூட முதலீட்டாளர்களுக்கு அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. பணம் கேட்பவர்களுக்கும் அவர் முறையான பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்துள்ளார். 

 

நாளுக்குநாள் முதலீட்டாளர்களிடம் இருந்து நெருக்கடி அதிகரித்த நிலையில், அவர் தரப்பில் இருந்து முதலீட்டாளர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதில், ''தன்னிடம் ஏலச்சீட்டில் முதலீடு செய்தவர்க்கு உரிய லாபத்துடன் முதிர்வுத்தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டேன். தற்போது கந்து வட்டி ரீதியில் பணம் கேட்டு மிரட்டுகிறீர்கள். உங்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும்,'' என்று கூறப்பட்டு இருந்தது. 

 

இந்த நோட்டீஸைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள், திங்கள்கிழமை (ஜன. 24) காலையில் சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர். 

 

புகார் குறித்து முதலீட்டாளர்கள் கூறுகையில், ''ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் நடத்தி வரும் ஏலச்சீட்டு திட்டத்தில் 150- க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளோம். பத்து லட்சம் ரூபாய், இருபது லட்சம் ரூபாய் சீட்டு திட்டங்களை அவர் நடத்தி வந்தார். 

 

நாங்கள் செலுத்திய பணத்தைக் கொண்டு அவர் சேலம், அந்தியூர், ஈரோடு ஆகிய இடங்களில் ஏராளமான அசையா சொத்துகளை வாங்கிப் போட்டுள்ளார். முதிர்வடைந்த பின்னரும் எங்கள் தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். இதுவரை அவர் சுமார் 15 கோடி ரூபாய் வரை முதலீட்டுத் தொகையை மோசடி செய்திருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ஊழியர் ஏமாற்றம்; லட்சக்கணக்கில் மோசடி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
18 lakh rupees scam by IT employee claiming profit from stock trading

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை நம்பிய ராமச்சந்திரன், மோசடி நபர்கள் கூறிய 8 வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story

ஆருத்ரா மோசடியில் அடுத்த பகீர்; பறக்கவிருக்கும் சம்மன்கள் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Investment in film production; Arudra fraud towards next level

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இது தொடர்பாகத் தற்போது வரை 23 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டும் அதே நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் மறுபக்கம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் மோசடி பணம் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'ஆருத்ரா பிக்சர்ஸ்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட திரைப்படத் தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணையைத் துருவி வருகின்றனர். மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கை மாற்றப்பட்ட நபர்கள் பற்றி விசாரித்து சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தவும்  தற்பொழுது முடிவெடுத்துள்ளது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை.