Skip to main content

“பணம் கேட்டு மிரட்டறாங்க..” - சீட்டிங் செய்த அப்பா, மகன் கைது..!  

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

Chit fund case father and son arrested in ranipet


இராணிப்பேட்டை மாவட்டம், ரத்தனகிரியை அடுத்த அரப்பாக்கம் கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார் ராஜேந்திரன். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளனர். ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் என பலவகை ஏலச்சீட்டுக்களை நடத்தியுள்ளார். இந்த ஏலச்சீட்டுக்கள் பல முடிவுற்றும் பணம் கட்டியவர்களுக்கு, சீட்டு எடுத்தவர்களுக்கு ராஜேந்திரன் பணம் தரவில்லையாம்.

 

இது தொடர்பாக ஏலச்சீட்டு கட்டிய வேலூரைச் சேர்ந்த பார்த்திபன், வேலூர் சரிதா, மகேஸ்வரி, நாகவல்லி, அலமேலுமங்காபுரம் ராதிகா போன்றோர் பணம் எப்போது தருவீர்கள் எனக் கேள்வி கேட்டுள்ளனர். “தருவேன், தருவேன்” எனச் சொல்லி சில மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார் ராஜேந்திரன். அவரது மகன் கோபி, “பணம் தரமுடியாது. உங்களால் என்ன செய்ய முடியும்மோ செய்துக்குங்க” என மோசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

 

இதில் அதிர்ச்சியானவர்கள், இராணிப்பேட்டை டி.எஸ்.பி பூரணியிடம் புகார் கூறியுள்ளனர். அவர் ரத்தினகிரி காவல்நிலையத்தில் புகார் தரச் சொல்ல, அதன்படி பிப்ரவரி 12ஆம் தேதி மாலை புகார் தரப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி பூரணி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். பணம் ஏமாற்றியதாக கூறப்படும் ராஜேந்திரன், கோபியை அழைத்துவந்து விசாரணை நடத்தியபோது, “பணம் தரலன்னு எங்களை மிரட்டறாங்க” என புகார் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்.

 

Chit fund case father and son arrested in ranipet

 

“சீட்டுப் பணம் தரலன்னா கேள்வி கேட்க மாட்டாங்களா? பணத்தைக் கேட்டா மிரட்டறாங்கன்னு புகார் சொல்லுவிங்களா” என எச்சரித்த போலீஸ், கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ராஜேந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். “ஏலச்சீட்டு மூலம் இவர்கள் ஏமாற்றியது ரூ.1 கோடி ரூபாய் இருக்கும்” என்கிறார்கள் காவல்துறையினர்.

 

சார்ந்த செய்திகள்