Skip to main content

தமிழ்நாட்டுக்கு வந்த சீனாவின் கரோனா சோதனைக் கருவிகளை இந்திய அரசு தடுத்திருப்பது மனிதகுலத்திற்கு எதிரான அநீதி! பெ. மணியரசன்

Published on 11/04/2020 | Edited on 11/04/2020



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா கொடுநோயை எதிர்த்துப் போரிடுவதில் முதல் தடையாக இருப்பது, அதை உடனடியாகக் கண்டறிய முடியாத சிக்கல்தான். 14 நாட்களுக்கு மேல் பாதுகாப்பில் வைத்து ஆய்வு செய்தால்தான் கரோனா கொள்ளை நோய் இருக்கிறதா, இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் நிலை இருக்கிறது.

 

கரோனாவுக்கு முதலில் பலியான சீன நாடு, அந்தத் தடையை உடைக்கும் வகையில், புதுக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அரை மணி நேரத்தில் சோதனை செய்து கரோனா நோயா இல்லையா எனத் தெரிவிக்கக் கூடிய மிகு விரைவுக் கருவி (Rapid Testing Kit) அது.

 

தமிழ்நாடு அரசு சீனாவிடமிருந்து 4 இலட்சம் மிகு விரைவு சோதனைக் கருவிகளை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தது. அவை ஏப்ரல் 9 அன்று தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏப்ரல் 10 அன்று முழுமையான மக்கள் பயன்பாட்டிற்கும் அவை கிடைத்திருக்க வேண்டும்.

 

ஆனால், இந்திய அரசு இடைமறித்து இக்கருவிகளைத் தமிழ்நாடு அரசு நேரடியாக வாங்குவதற்கு தடை விதித்துள்ள கொடிய செய்தி, குத்தீட்டியாய் நெஞ்சைத் தாக்குகிறது. இந்திய நலவாழ்வுத் துறை செயலாளர், மாநில அரசுகளின் நேரடிக் கொள்முதலுக்குத் தடை விதித்து அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

 

P. Maniyarasan

 

மனித குலத்தையே அழிக்கும் கரோனா போன்ற கொடிய நோய்த் தாக்குதல் தீவிரமாக இருக்கும் நிலையில், மக்கள் உயிர் காக்கும் போர்க் கால நடவடிக்கையாக மாநில அரசு வெளிநாடுகளிலிருந்து சிகிச்சைக் கருவிகளை வாங்குவதற்கு அதிகாரமில்லை, உரிமையில்லை என்று நடுவண் அரசு தடுத்திருப்பது மனித குலத்திற்கே எதிரான கொடிய செயலாக உள்ளது.

 

http://onelink.to/nknapp



தமிழ்நாடு அரசு வாங்கிய கருவிகளை இந்திய அரசு கைப்பற்றி, அதை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

மகாராட்டிரத்தை அடுத்து, இந்தியாவிலேயே மிகக்கடுமையாக கரோனா நோயால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள தமிழ்நாட்டுக்கு கரோனா துயர் துடைப்பு நிதியாக - வெறும் 314 கோடி ரூபாயை ஒதுக்கியும், தமிழ்நாட்டை விட குறைவான பாதிப்பை சந்தித்துள்ள இந்தி மாநிலங்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியும் இந்திய அரசு இனப்பாகுபாட்டுடன் நடந்து கொண்டு வருகிறது.

 

இந்நிலையில், இப்போது மருத்துவத் துணைக் கருவிகளை, இந்திய அரசு தானே கொள்முதல் செய்து பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ள செய்தி, இதிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் என்ற அச்சத்தைத் தருகிறது. தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டை இன அடிப்படையில் வஞ்சித்து வரும் இந்திய அரசு, இந்த அவசரகால சூழலிலும் இவ்வாறு செய்வது தமிழர்களின் உயிரோடு விளையாடும் மிகக்கொடிய செயலாகும்!

 

இந்திய மக்களைப் பாதுகாப்பதற்காக இரவும் பகலும் அயறாது பாடுபடுவதாகத் தலைமை யமைச்சர் நரேந்திர மோடி அவர்களைப் பற்றி செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆனால், எவ்வளவு பெரிய மனிதப் பேரழிவு வந்தாலும், அந்த நிலையிலும் மாநில உரிமைகளைப் பறித்து டெல்லியில் அதிகாரங்களைக் குவிப்பதில்தான் முதன்மைக் கவனம் ஆட்சியாளர் களுக்கு இருக்கும் என்றால், இக்கொடுமையை என்னவென்று சொல்வது?

 

இந்நேரத்தில், வட அமெரிக்காவில் கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப் ஆட்சியின் செயலற்ற தன்மையை எதிர்த்து, தனிநாட்டுப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கரோனா கொள்ளை நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் உடனுக்குடன் கிடைக்கச் செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி, கலிபோர்னியா இனி தனி அரசு என்றும் நேரடியாக வெளிநாடுகளிலிருந்து மருந்துகளையும், கருவிகளையும் கலிபோர்னியா இறக்குமதி செய்து கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 

>

கரோனா கொள்ளை நோயிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பது எல்லாவற்றையும் விட உடனடித் தேவையாகும். எனவே, மாநில அரசுகள் நேரடியாக மற்ற நாடுகளிலிருந்து மருந்துவக் கருவிகள் வாங்குவதற்கு விதித்திருக்கும் தடையை இந்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும்.

 

தமிழ்நாடு முதல்வர் கேட்ட 9,000 கோடி ரூபாய் கரோனா நிதியை உடனடியாக இந்திய அரசு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேவையற்ற குறுக்கீடுகளை இந்திய அரசு செய்ய வேண்டியதில்லை.

 

சீன நாட்டிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு வந்து கொண்டிருக்கும் மிகு விரைவு சோதனைக் கருவிகளை தமிழ்நாடு அரசு எடுத்துப் பயன்படுத்த வழிவிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு எதிராகக் கடைப்பிடிக்கும் இனப்பாகுபாட்டு அணுகுமுறையை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

உளவு பார்ப்பதாக கைதான புறா; 8 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Pigeon arrested for spying and Released after 8 months

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்து வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படி மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், சீனாவில் இருந்து நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட புறாவை 8 மாதங்கள் சிறையில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பிர் பாவ் ஜெட்டி பகுதியில், கடந்த 2022 ஆண்டு மே மாதம் வித்தியாசமாக இருந்த புறா ஒன்று பிடிப்பட்டது. அந்த புறாவின் கால்களில் தாமிரம் மற்றும் அலுமினியத்திலுமான இரண்டு மோதிரங்கள் இருந்தன. மேலும், அந்த புறாவின் இரண்டு இறக்கையின் கீழ் பகுதியில் சீனா மொழியில் எழுதப்பட்ட செய்தி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சீனாவில் இருந்து உளவு பார்ப்பதற்காக புறா வந்திருப்பதாக சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக ஆர்சிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த புறா சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதா? என விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிடிப்பட்ட புறாவை மும்பை கால்நடை மருத்துவமனையில் உள்ள கூண்டில் சிறை வைத்தனர். 

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட புறா தைவானில் திறந்தவெளி நீர் போட்டியில் பங்கேற்கும் புறா என்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த புறா உளவு பார்ப்பதற்காக வரவில்லை என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிடிப்பட்ட புறாவை விடுவிப்பதற்கு போலீசாரிடம் கால்நடை மருத்துவமனை அனுமதி கோரியது. மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு பிடிப்பட்ட புறா நேற்று முன்தினம் (30-01-24) விடுவிக்கப்பட்டது.