Skip to main content

மூச்சுத் திணறி மூன்று குழந்தைகள் உயிரிழப்பு... கண்கலங்கிய சபாநாயகர் அப்பாவு!

Published on 05/06/2022 | Edited on 06/06/2022

 

 

childrens incident police investigation in nellai district

நெல்லை மாவட்டத்தின் பணகுடி அருகேயுள்ள லெப்பைக்குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு நித்திஷ் (வயது 7), நிதிஷா (வயது 5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த இரு குழந்தைகளும், அதே பகுதியைச் சேர்ந்த சுதன், தபிஷா தம்பதியரின் குழந்தையான கபிசந்த் (வயது 4) ஆகிய மூவரும் நேற்று (04/06/2022) மதியம் 02.00 மணியளவில் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகராஜின் அண்ணனான மணிகண்டனின் காரைத் திறந்து உள்ளே சென்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

காரினுள்ளே வெகுநேரம் விளையாடிய அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் வெளியேற நினைத்து கதவைத் திறக்க முயன்ற குழந்தைகளுக்குத் தெரியவில்லை. காற்றுப் புகாத காருக்குள் மூச்சுத்திணறிய மூன்று குழந்தைகளும் காரிலேயே மயங்கிச் சரிந்திருக்கின்றனர்.

 

இந்தச் சூழலில் வெகுநேரமாகியும் விளையாடச் சென்ற குழந்தைகள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தைகள் கிடைக்காமல் போகவே, தற்செயலாக அந்தப்பக்கம் நின்றிருந்த காரைப் பார்த்தவர்கள் அதனுள் மூன்று குழந்தைகளும் மயங்கிக் கிடந்தது கண்டு பதறியவர்கள் மூவரையும் உடனடியாக மீட்டு பணக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

 

அங்கு குழந்தைகளைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூன்று குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதைக் கேட்டுக் கதறிய பெற்றோர்களின் துக்கம் நெஞ்சைக் கனக்க வைத்தது. இதுகுறித்த தகவலறிந்த பணக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

childrens incident police investigation in nellai district


ஏற்கனவே கடுமையான வெயில். பூட்டப்பட்ட காரினுள்ளே கடுமையான வெப்பத்தாலும், காற்று புகாத போதிலும், வெப்பத்தில் குழந்தைகளின் பிஞ்சு மேனி வெந்திருந்ததாகச் சொன்னார் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியான அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்.

 

தகவலறிந்து பணக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த சபாநாயகர் அப்பாவு வாடிப் போய் இறந்த மூன்று பிஞ்சுகளையும் கண்டதும் கண்கலங்கிவிட்டார். அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன சபாநாயகர் அப்பாவு சோகம் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை எஸ்.பி.சரவணன் பிள்ளைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தினார். பிஞ்சு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அஜாக்கிரதையாக இருத்தல் கூடாது. எச்சரிக்கை... எச்சரிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியன் கம்பியில் மோதி, கழ்விந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார், மணல் ஏற்றிவந்த லாரி உரிமையாளர்கள் உதவியுடன் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்த விபத்தில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

 

Next Story

செல்போனுக்காக வடமாநில இளைஞர் கொலை; பரபரத்த மதுரை

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

North State youth incident for cell phone;Madurai

 

இரவு நேரம் சாலையில் நடந்து சென்ற பீகார் மாநில தொழிலாளியை கொலை செய்து செல்போன் பறித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியில் பீகாரைச் சேர்ந்த சுபேஷ்குமார் மற்றும் சன்னி ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சாலை ஓரமாக நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு கும்பல் வடமாநில இளைஞர்களை வழிமறித்து செல்போனை கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதில் பைக்கில் வந்த கும்பல் வடமாநில தொழிலாளர்கள் இருவரையும் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த சுபேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உயிரிழந்த சுபேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரவு வேளையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.