
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் காவல் சரகம் பெருநாவலூர் அருகில் உள்ள கள்ளியகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தோணி - இந்துமதி தம்பதி. இந்த தம்பதியின் மகள் அனன்யா (வயது 2). அதே பகுதியைச் சேர்ந்த பீட்டர் - புனிதா தம்பதியின் மகன் யர்சித் (வயது 3). அந்த வகையில் பக்கத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த இந்த குழந்தைகள் இருவரும் அதே பகுதியில் ஒன்றாக விளையாடுவதும் அங்குள்ள அங்கன்வாடிக்கும் சென்று வருவது வழக்கம்.
இத்தகைய சூழலில் தான் இன்று (22.06.2026 - ஞாயிற்றுக்கிழமை) மாலை இரு குழந்தைகளும் வீட்டின் அருகே விளையாடியுள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தைகளை காணவில்லை. குழந்தைகளை காணவில்லையே என்று இரு குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அந்தப் பகுதியில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் இரு குழந்தைகளும் அதேப் பகுதியில் உள்ள குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இருப்பினும் இரு குழந்தைகளும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு உறவினர்கள் கதறி அழுத நிலையில் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோயில் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.