உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் முக்கிய நகரங்களில் மக்கள் தீபங்களை ஏற்றினர். தமிழகத்திலும் பல இடங்களில் வீடுகளில் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது. சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள சங்கராபுரம் 3 வது தெருவில் வசிக்கும் குழந்தைகள் பிரதமர் கூறியது போலவே இரவு ஒன்பது மணியளவில் மின்விளக்குகளை அனைத்துவிட்டு, அகல் விளக்குகளையும், டார்ச் லைட் போன்றவற்றையும் ஒளிரச்செய்தனர்.