Skip to main content

பள்ளி செல்லா குழந்தைகளை நக்கீரன் முயற்சியால் பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

Children go to school at the behest of Nakkeeran  Officers enrolled in the school!

 

கடந்த மாதம் முதல் பள்ளி செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணியில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள எல்.என்.புரம் ஊராட்சி சுக்கிரன்குண்டு பகுதியில் குளக்கரையோரம் வசிக்கும் குடும்பங்களில் ஏராளமான பள்ளி வயது குழந்தைகள் உள்ளனர். அவர்களில் பலர் பள்ளிக்குச் செல்லவில்லை. சிலர் தங்கள் குழந்தைகளைக் கூலிக்கு ஆடு மேய்க்க அனுப்பியுள்ளனர். அந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நேற்று (24/08/2021) கொண்டு சென்றோம்.

Children go to school at the behest of Nakkeeran  Officers enrolled in the school!

 

நமது கோரிக்கை குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் ஆகியோர் சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ. அலுவலர்களிடம் உடனடியாக சுக்கிரன்குண்டு கிராமத்தில் பள்ளி செல்லா குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டனர்.

 

இந்த உத்தரவையடுத்து இன்று (25/08/2021) காலை எஸ்.எஸ்.ஏ. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், வட்டாரக் கண்காணிப்பாளர் செல்வராசு, வட்டாரக் கல்வி அலுவலர் மலர்விழி மற்றும் எல்.என்.புரம், பட்டிபுஞ்சை, காசிம்புதுப்பேட்டை, புளிச்சங்காடு, கரம்பக்காடு பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் சுக்கிரன்குண்டு கிராமத்தில் வீடு வீடாக சென்று, பள்ளி வயது குழந்தைகள் பற்றிய விபரங்களை சேகரித்து, உடனே பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தியதுடன் பல மாணவ, மாணவிகளை அதிகாரிகளே அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தனர். மேலும், ஆடு மேய்க்கச் சென்றுள்ள மாணவர்களையும் மீட்டு பள்ளியில் சேர்ப்போம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

 

சுக்கிரன்குண்டு கிராம மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து காசிம்புதுப்பேட்டை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பசீர்அலி மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதே பகுதியில் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல வசதியில்லாமல் இருந்த ஒரு மாணவியின் கல்லூரி படிப்பிற்கு பசீர் அலி உதவிகள் செய்வதாகக் கூறினார்.

Children go to school at the behest of Nakkeeran  Officers enrolled in the school!

 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "50 வருடங்களுக்கு மேலாக வசிக்கிறோம். பல பேருக்கு வீட்டுமனைப் பட்டா, வீடு இல்லை. குளத்துக்கரையில்தான் குடியிருக்கிறோம். அதனால் ரேசன் கார்டு இல்லை. அதனால தினமும் கூலி வேலைக்குப் போனால்தான் சாப்பிட முடியும். எங்களுக்கு வீடுகட்ட இடம் கொடுக்க வேண்டுமென்று பல வருடமாகக் கேட்கிறோம்; யாரும் கண்டுகொள்ளவில்லை" என்றனர்.

 

நக்கீரன் கோரிக்கையால் பல மாணவர்கள் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றிகள். இதேபோல அறந்தாங்கி ஒன்றியம் மேற்பனைக்காடு மேற்கு புதுக்குடியிருப்பு பகுதியிலும் பள்ளி வயது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதையும் அதிகாரிகள் கவனித்தால் நல்லது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.