Skip to main content

அடுத்தடுத்து குளத்தில் மூழ்கி பலியாகும் சிறுவர்கள்.. அபாய பதாகை வைத்த போலீசார்!

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல வருடங்களுக்கு பிறகு, இந்த ஆண்டு தான் குளங்களில் தண்ணீர் நிரம்பும் அளவில் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வந்தாலும், கடந்த 10 நாட்களில் நடக்கும் துயர சம்பவங்களால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


கடந்த 10 நாட்களுக்கு முன்பு விராலிமலை அருகில் உள்ள ஆவூர் கிராமத்தில் சின்னக்குளத்தில் தண்ணீர் நிறைந்திருப்பதை பார்த்து ஆனந்தமாக குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் சேற்றில் சிக்கி மூச்சு திணறி பலியானார்கள். அந்த சோகம் மறைவதற்குள் கடந்த 2- ஆம் தேதி கந்தர்வகோட்டை அருகில் உள்ள மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 8- ஆம் வகுப்பு மாணவன் அந்தோணிசாமி மகன் ஸ்டீபன்ராஜ். பாரதப் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை பள்ளியில் மட்டுமல்ல, தனது தெருவிலும் செயல்படுத்தி அனைவராலும் பாராட்டப்பட்ட மாணவன் மங்கனூர் பெரிய குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று நடுக்குளத்திற்கு சென்று திரும்ப முடியாமல் தண்ணீரில் மூழ்கி பலியானார். 


நல்ல ஒரு இளம் சமூகப் போராளியை இழந்து விட்டோம் என்று கிராமமே கண்ணீர் வடித்தது. இந்த மாணவன் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை தொடர்ந்து கடைப்பிடித்தான் என்பதால் அவனது குடும்பத்திற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

Children drowning in ponds next   Cops with risk banner POLICE AWARENESS



இந்த சோகத்திலிருந்து கந்தர்வகோட்டை மக்கள் மீளாத நிலையில் தான் இன்று அடுத்த சம்பவம் நடந்துள்ளது.
 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா சின்னக்கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்  மகன் கிஷோர் குமார்(8). 3- ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக விடுமுறை என்பதால், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கோவிலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கிஷோர்குமார் வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் பரமேஸ்வரியுடன், அங்கு உள்ள சங்கு ஊரணியில் கிஷோர் குமார் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கிய கிஷோர்குமார், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். 
 

இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார்  பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அப்பகுதி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பல வருடங்களுக்கு பிறகு தண்ணீர் நிறைந்துள்ள குளக்கரைகளில் எச்சரிக்கை பதாகைகளை வைத்துள்ளனர். மேலும் இதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் தண்ணீர் நிறைந்துள்ள குளங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைத்தால் நல்லது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.