![n](http://image.nakkheeran.in/cdn/farfuture/tbvdmBtie1IArzv7ZD4lFrHluOUmQvEuzMMwbUReKNg/1685299977/sites/default/files/inline-images/nm108_0.jpg)
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, அல்லேரி மலைக் கிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி விஜி. இவரது மனைவி பிரியா. இவர்களின் 1 1/2 வயது குழந்தையான தனுஷ்கா என்ற பெண் குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தபோது இரவு நேரம் என்பதால் அருகே உள்ள காட்டுப்பகுதியிலிருந்து பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துள்ளது.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு எழுந்து பார்த்த பெற்றோர் பாம்பு கடித்ததை பார்த்து பதறி உள்ளனர். உடனடியாக அணைக்கட்டு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே இறந்துள்ளனர்.
![mm](http://image.nakkheeran.in/cdn/farfuture/UJ4zo6OGPPvT_sQO-LNmuIyiim2r7ZxcApL1fl7sAOA/1685300323/sites/default/files/inline-images/nm109_0.jpg)
மேலும் தகவலறிந்த அணைக்கட்டு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கைக்குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல போதிய வசதி இல்லாமல் பாதி வழியிலேயை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இதையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று உடலை கால்நடையாக சுமார் 10கி.மீ தூரம் மலைப்பகுதிக்கு கையால் தூக்கி சென்றுள்ளனர்.
மேலும் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே கைக்குழந்தை இறந்தது என்றும், கையாலே பெற்றோர்கள் தூக்கிச் சென்றது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய சாலை வசதி ஏற்படுத்தித் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.