ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி சைல்ட் லைன் உறுப்பினர் ஒருவரது வாட்ஸ்-ஆப் நம்பருக்கு குழந்தைத் திருமண போட்டோ ஒன்றை ஃபார்வேர்ட் செய்திருந்தார்கள். சமூகநல விரிவாக்க அலுவலர் விசாரித்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் - மல்லி – மாயத்தேவன்பட்டியில் வசிக்கும் மணிகண்டன் - குமரி தம்பதியின் (தம்பதியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகளுக்குத்தான் அப்படியொரு திருமணம் நடந்தது தெரியவந்திருக்கிறது.
சிவகாசியைச் சேர்ந்த சாமுவேல், மினி பஸ்ஸில் செல்லும்போது முதலில் குமரியுடன் பழகியிருக்கிறான். பிறகு குமரியின் மகளான 7-வது வகுப்பு படிக்கும் சிறுமி மீது சாமுவேலின் தவறான பார்வை படர்ந்திருக்கிறது. கடந்த 21-ஆம் தேதி, குமரியையும் அவருடைய மகளான சிறுமியையும் திருச்செந்தூர் அழைத்துச்சென்ற சாமுவேல், அங்குள்ள லாட்ஜில் வைத்து திருமணம் செய்திருக்கிறான். கொலை மிரட்டல் விடுத்ததாலேயே பயந்துபோய் குமரி இதற்குச் சம்மதித்திருக்கிறார். இந்த விவகாரம் அந்தச் சிறுமியின் தனதை மணிகண்டனுக்கு தெரிந்து, சாமுவேல் மீது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகே, சிறுமியின் கழுத்தில் தான் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்திருக்கிறான் சாமுவேல்.
சமூகநல விரிவாக்க அலுவலர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகி சாமுவேலைத் தேடிவருகின்றனர்.