Skip to main content

கோவை அருகே குழந்தை திருமணம்: பரபரப்புக்கு இடையே தடுத்து நிறுத்தம்...

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

கோவை ஆலாந்துறை அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை சைல்டு லைன்,சமூக நலத்துறை மற்றும் காவல் துறையின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.

 

child marriage stopped in coimbatore

 

குழந்தைத் திருமணம் என்பது இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க நம் நாட்டில் பல்வேறு புரட்சிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த நடைமுறையை தற்போது வரை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. மேலும், இந்த குழந்தைத் திருமணங்களால் பெண் குழந்தைகளின் கல்வி, உரிமை, மனம், உடல் ஆகியவை பாதிக்கப்படுவதால் இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை திருமணங்களை ஒழிக்க நம் அரசு 1929இல் குழந்தை திருமண தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. 

பின்னர், சில ஆண்டுகளுக்கு பின்பு தெளிவான வயது வரம்பை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த பெண்ணும், 21 வயது பூர்த்தி அடைந்த ஆணும் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வரையறுத்தது. இப்படி குழந்தை திருமணத்தை தடை செய்து அரசு பல்வேறு சட்டங்களை வகுத்தாலும் இன்னும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததை தற்போது வரை நடைபெறும் திருமணங்கள் வெளிப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாதம் 8 முதல் 10 குழந்தை திருமணங்கள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகிறது. இப்படி நடைபெறும் திருமணங்கள் பற்றி தகவல் அறியும்பட்சத்தில், சைல்டு லைன் அலுவலர்களும், சமூகநலத்துறை மற்றும் காவல் துறையும் இணைந்து தடுத்து வருகின்றனர்.

இப்படியிருக்க கோவை மாவட்டத்திலுள்ள ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இந்த திருமணம் தொடர்பாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தகவலறிந்த சைல்ட் லைன் கவுன்சிலர் ஏஞ்சலினா, அதிகாரி சுலேகா தலைமையிலான குழுவை சிறுமியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர்களுடன் சமூகநலத்துறை அதிகாரி மற்றும் காவல் துறையினரும் சென்று பெண்ணின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் பெற்றோர்களுக்கு குழந்தைத் திருமணம் தவறு என புரிய வைக்கப்பட்டது. இதையடுத்து, திருமணத்தை 18 வயது பூர்த்தி அடையும் வரை நிறுத்திக் கொள்வதாக பெற்றோர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர். இதனால், நாளை நடைபெறவிருந்த குழந்தைத் திருமணம் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம் போலிப்பாசம்” - முதல்வர் விளாசல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Everything that the PM says about liking Tamilnadu is hypocrisy

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இணைத்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், “கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம். அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?. தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?. கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக. கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?. தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம். வெறும் வெளிவேடம். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.