
திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தோர் லட்சுமணன் மற்றும் அவரது மகன் வீரமணி (27). வீரமணிக்கு, அவருடைய உறவுமுறையான லால்குடி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் 17ஆம் தேதி வீரமணிக்கும் அச்சிறுமிக்கும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே திருமண வயதை எட்டாத சிறுமிக்குத் திருமணம் நடந்ததாக மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையைத் துவங்கிய காவலர்கள், எடமலைப்பட்டி புதூரில் உள்ள வீரமணி வீட்டிற்குச் சென்று திருமணத்திற்கு உடந்தையாக இருந்த வீரமணியின் தந்தை லட்சுமணனை கைது செய்தனர். மேலும், வீரமணியை கைதுசெய்ய முயன்றபோது அவர் தப்பிச் சென்றுள்ளார். பிறகு அந்தச் சிறுமியை மீட்டு, பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். தப்பி ஓடிய வீரமணியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.