Skip to main content

தற்கொலையில் முடிந்த குழந்தை திருமணம்..! 

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

child marriage near madurai

 

மதுரை பாண்டிகோவில் அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த் - தாமரைச்செல்வி தம்பதியினரின் மூத்த மகள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்துவருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மாணவியின் விருப்பமின்றி தாய் மாமனுடன் திருமணம் செய்வதாக பெற்றோர்கள் முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

 

இதனையடுத்து மாணவி, தனக்கு விருப்பமின்றி திருமணம் முயற்சிகள் நடைபெறுவதாகவும், தனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகாவும், அதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆன்லைன் மூலமாகப் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூற அனுப்பிவைத்துள்ளனர். மாணவிக்கு மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர்கள் மனநல ஆலோசனை வழங்கிய நிலையில், உறவினரின் வீட்டில் தங்கியுள்ளார். 

 

நேற்று (16.06.2021) மாணவி தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பிறகு அம்மாணவி தனது அறைக்குள் சென்றுள்ளார். ஆனால், நேரமாகியும் அவர் அறையைத் திறக்காததால், ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது, மாணவி தூக்கிட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது. அதனைப் பார்த்து பதறிப்போன பெற்றோர்கள், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மாணவி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு இந்தத் தற்கொலை குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவியின் உடலை, உடற்கூராய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்குப் போலீசார் அனுப்பிவைத்துள்ளனர். மாணவியின் தற்கொலை குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அண்ணாநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

 

ஊரடங்கைப் பயன்படுத்தி பள்ளி மாணவிக்குத் திருமணம் நடத்த முயன்றதால் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்று ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதால், அதனைத் தடுக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தனிப்பிரிவை உருவாக்கி புகார்களை ரகசியமாக பெற வேண்டும் எனவும் மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.