
பள்ளிபாளையம் அருகே, சிறுமியைக் கடத்திச்சென்று திருமணம் செய்த கட்டடத் தொழிலாளிக்கு நாமக்கல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை காந்தி நகரைச் சேர்ந்தவர் முருகன் (30). கட்டடத் தொழிலாளி. இவர் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, நண்பர்கள் உதவியுடன் அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் முருகனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் விஜயபாரதி ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி முனுசாமி, புதன்கிழமை (செப். 27) தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில், முருகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.