Skip to main content

வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள்....உதவி செய்ய காத்திருக்கும் "சைல்ட் லைன் இந்தியா"

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

நவம்பர் 14, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம். பிரதமர் நேருவை நேரு மாமா என இந்தியா முழுக்க உள்ள குழந்தைகள், மாணவர்கள் செல்லப் பெயர் கொடுத்து அழைத்தனர். அந்த அளவுக்கு நேரு மீது குழந்தைகளுக்கும், குழந்தைகள் மீது நேரு அவர்களுக்கும் பாசம் இருந்தது.
 

child line is ready to help


அப்படிப்பட்ட வரிசையில் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளை வளர்க்கும் முறையில் அன்பு, பாசம், நேசம், ஒழுக்கம் என்பதில் பெற்றோர்கள் கடமையும் நேர்மையுடனும் இருக்கிறார்களா என்றால் பெருமளவு இல்லை என ஆதாரப்பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. அதில் ஒன்று தான் இந்த செய்தி வெளிக்காட்டுகிறது.

மத்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் "சைல்டு லைன் இந்தியா" என்ற பவுண்டேசன் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் சைல்டு லைன் செயல்பட்டு வருகின்றது. இது தவிர சென்ற ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் சைல்டு லைன் கிளை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

சைல்டு லைன் அமைப்பு முக்கிய பணியாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், சித்ரவதைகள், குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்தல், குழந்தைகளை பாதுகாத்தல், ஆதவற்ற குழந்தைகளை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்தல் அவர்கள் பாதுகாப்பாக வளர வைப்பது, உரிய கல்வி கொடுப்பது உள்ளிட்ட பல பணிகள் செய்து வருகின்றது.

ஈரோடு ரயில்நிலையத்தில் சைல்டு லைன் தொடங்கப்பட்ட இந்த 7 மாதங்களில் மட்டும் 150 குழந்தைகள் ரயில்நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சைல்டு லைன் அமைப்பு கூறுகிறது. இது சம்பந்தமாக ஈரோடு ரயில்வே சைல்டு லைன் திட்ட மேலாளர் மகேஸ்வரன் அவர்களிடம் நாம் பேசியபோது அவர், "ஈரோடு ரயில்நிலையத்தில் செயல்பட்டு வரும் இந்த சைல்டு லைன் மூலமாக மாதம் ஒன்றுக்கு சராசரியாக 25 குழந்தைகள் மீட்டு வருகிறோம் இந்த ஏழு மாதங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோர் மற்றும் அரசு காப்பகங்களில் ஒப்படைத்துள்ளோம். பெரும்பாலும் தங்களது பெற்றோர்கள் திட்டுதல், அடித்தல், கொடுமைப்படுத்துதல் மற்றும் உறவினர்களால் தொல்லை, பெற்றோரின் சண்டையால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுதல், படிக்கும் பள்ளிகள் குழந்தைகளை மார்க் எடுக்க இயந்திரம் போல் நடந்துவது அதனால் படிக்க விருப்பமின்மை உள்ளிட்ட பல  காரணங்களால் குழந்தைகள் மன வேதனையுடன் வீட்டை விட்டு வெளியேறுவது வாடிக்கையாக இருந்து வருகின்றது. இது தவிர குழந்தை கடத்தலும் இருந்து வருகின்றது. 


சென்ற மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து 6 சிறுமிகள், 2 சிறுவர்கள் ரயில் மூலம் ஒரு கடத்தல் கும்பல் அவர்களை கடத்தி வந்ததும், பின்னர் அக்குழந்தைகளை ஈரோடு ரயில்நிலையத்தில் நாங்கள்  மீட்டு காப்பகத்தில் ஒப்டைத்தோம். தமிழகத்திலேயே முதன்முறையாக சைல்டு லைன் புகார் மூலம் ஆள் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது ஈரோட்டில் தான். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள் அல்லது கடத்தல் போன்றவை குறித்து பொதுமக்கள் எங்களுக்கு 1098 என்ற போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது ஆபத்தானது. குழந்தைகள் மீது பெற்றோர்கள் அன்புடன் கலந்த தனி கவனம் செலுத்துவது அவசியமான ஒன்று.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tragedy of 11-year-old girl; Police serious investigation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு  தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.