ஊத்தங்கரை அருகே, பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனை கடத்திச்சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரு வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகன் மதன் (13, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். வியாழக்கிழமை (செப். 1) காலை பள்ளிக்குக் கிளம்பிய மதன், வழக்கம்போல் செல்லக்கூடிய பேருந்தை தவற விட்டுவிட்டான். இதனால் அவன், பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் இருவர், சிறுவனை வழிமறித்தனர். அவர்கள் மதனை அங்குள்ள ஒரு மறைவான இடத்திற்கு பலவந்தமாக கடத்திச் சென்றனர். அவர்கள் சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சிறுவன் பேச முடியாமல் திக்குமுக்காடியதால் பயந்து போன வாலிபர்கள் அவனை அங்கேயே விட்டுவிட்டு, தப்பிச்சென்று விட்டனர். சிறுவன் கூச்சல் போட்டதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
மகனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து ஊத்தங்கரை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் லட்சுமி, சிறுவனிடம் வக்கிரமாக நடந்து கொண்ட வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. நிகழ்விடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.