Skip to main content

அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Chief Secretary's Important Instructions to Government Officials

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் ஏனைய துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு  தலைமை செயலாளர் சிவ தாஸ் மீனா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், “பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நகரின் ஏனைய பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் மற்றும் திறந்தவெளிகளை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்திய பின்னர், பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும். பூச்சிக்கொல்லி தெளித்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். மின்சாரம் தடைபட்ட இடங்கள் மற்றும் தெருக்களைக் கண்டறிந்து, மீதமுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இலை தழைகள் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட வேண்டும்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதுடன், கூடுதல் பணியாக கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும் ஜெட் ரோடிங் இயந்திரங்கள், அதிக திறன் கொண்ட உறிஞ்சி இயந்திரங்கள் மற்றும் கழிவுநீரகற்றும் கொள்கலன் ஊர்திகளை (sewerage Tankers) ஏனைய இடங்களிலிருந்து வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரியவாறு பயன்படுத்த வேண்டும்.

Chief Secretary's Important Instructions to Government Officials

பால் விநியோகம் மற்றும் பிற இன்றியமையாப் பொருட்களின் இருப்பினைக் கணக்கிடுங்கள். எந்தவொரு வணிகரும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் கூடுதல் விலையில் பொருட்களை விற்பனை செய்வதில்லை என்பதை உறுதி செய்யவும். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைக் காட்டிலும் அதிக விலை வைத்து பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும். பொதுமக்களின் நலன்கருதி, தோட்டக்கலை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 150 நடமாடும் காய்கறி கடைகளை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காய்கறிகளுடன் சேர்த்து பாலையும் விற்பனையாளர்கள் விற்பனை செய்வார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் திறக்கப்படும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும். அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Tamil Nadu government case against central government

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த்தையும், திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டினையும் ஆதரித்து நாங்குநேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tamil Nadu government case against central government

அப்போது அவர் பேசுகையில், “இரண்டு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் பிச்சை என்று ஏளனம் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

Tamil Nadu government case against central government

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமனன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.