ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்கள் நலத் திட்டங்கள், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பது எனத் தொடர்ந்து தமிழகம் முழுக்க சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்ற வாரம் கரூர், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு சென்றார். தொடர்ந்து வருகிற 14 ந் தேதி கோவை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 15, 16 என இரு நாட்கள் கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற நகரங்களில் நடக்கும் அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
கோவை வரும் முதல்வரை பிரமாண்ட முறையில் வரவேற்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகளை நடத்த கோவையிலேயே முகாமிட்டுள்ளார் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி.
இன்று (11-07-2022) திங்கள் கிழமை காலை, அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாநகர் கிழக்கு மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். 14, 15 ந் தேதி தி.மு.கழக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கோவைக்கு வருகை தருவதும், அவரை பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பதோடு பொதுமக்களையும் பங்குபெற வைக்க வேண்டும் என்றும், தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், வார்டு செயலாளர்கள் மாமன்ற கவுன்சிலர்கள் இணைந்து செயல்பட வேண்டும், கோவை தி.மு.க.வின் கோட்டை என உருவாக்க வேண்டும் போன்ற பல தகவல்களை அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.
முதல்வரின் கோவை விசிட் கோவை மக்கள் பயன் பெறும் பல்வேறு அறிவிப்புகள் அடங்கியதாக இருக்கும் என்கிறார்கள் உ.பி.க்கள்.