புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்விமுறை இடம்பெற்றிருப்பது வேதனையை அளித்திருக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் தொடர்ந்து பின்பற்றப்படும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த நிலைபாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் இதுகுறித்து கூறுகையில், "முதல்வரின் கருத்து ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை இருக்கும் நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மூன்றாவது மொழியைக் கற்க ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் மக்களின் நிலையை புரிந்து உணராது முதல்வர் கூறியுள்ள இந்த கருத்து தமிழக பாஜகவிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" எனக் கூறியுள்ளார்.