திருச்சி, திருவெறும்பூர் காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.28-ம் தேதி வருகைதர உள்ளதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.28-ம் தேதி திருச்சி வருகிறார். அன்றைய தினம் காலை திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘Stem On Wheels' திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளார்.
அறிவியல் சம்பந்தமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வையும் அறிவியல் சார்ந்த அறிவையும் கற்பிக்கும் வகையில் நூறு இரு சக்கர வாகனங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கும் புதிய திட்டத்தை முதல்வர் கொடி அசைத்து துவக்கி வைக்க இருக்கிறார்.
இதனை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இன்று நிகழ்ச்சி நடைபெற இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் கோட்டத் தலைவர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் ஆகியோரும் கல்வித்துறை உயர் அலுவலர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டார்கள்.