Chief Minister to Tiruvarur

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாளை திமுகவினர் இந்த வருடம் முழுக்க கொண்டாடிவருகின்றனர். கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 20ம் தேதி திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறக்கப்படவுள்ளது. இதனை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்துவைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்கிறார்.

Advertisment

திருவாரூர் அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் இந்த கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

Advertisment

இந்த கலைஞர் கோட்டத்தை 20ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சி உட்பட திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சை வழியாக இரவு திருவாரூர் செல்கிறார். நாளை திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

Advertisment

20ம் தேதி அன்று வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, திருவாரூரில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.