Skip to main content

“தமிழக முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்”-பாலசுப்பிரமணியன் பேச்சு!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

"The Chief Minister of Tamil Nadu should directly intervene in this matter" - Balasubramanian speech

 

சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்தின் பணியாளர் விரோத அணுகு முறையை கண்டித்து மாநில கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இணை அமைப்பாளர் பிச்சைமுத்து மாநில தலைவர் சரவணன், தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா உள்ளிட்ட தமிழக அளவில் முக்கிய நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் இதில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டாஸ்மாக் பணியாளர்களின் இன்றைய நிலை குறித்து ஐந்து பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் டாஸ்மாக் பணியாளர்களின் அன்றாடப் பணிகள், டாஸ்மாக் கடைகளில் அன்றாட நிகழ்வுகளின் வெளிப்படை அறிக்கை, ஒரு கடையை நடத்த தினந்தோறும் ஆகும் செலவினங்கள், மாதம் மாதம் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் கையூட்டு விபரம்,  மதுபாட்டில் மீது கூடுதலாக விற்கப்படும் தொகையை நாளொன்றுக்கு ஆகும் செலவு பணியாளர்களின் அத்தியாவசிய செலவுகள் மாவட்டம் விட்டு மாவட்டம் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில மாநாட்டில் டாஸ்மாக் பணியாளர்களின் இன்றைய நிலை குறித்து அதன் மாநில தலைவர் சரவணன் விரிவாக எடுத்துக் கூறியிருந்தார். போனஸ்  குறித்து அமைச்சர் அளித்த பதிலுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மாநில தலைவர் குறிப்பிட்டு இருந்தார். அதனால்  அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் உத்தரவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  டாஸ்மாக் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக அரசு இதை நிறைவேற்ற வில்லை.  இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் கூட்டம் இங்கு நடத்தப்பட்டது. 

 

இந்தக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் அமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் போக்க மேலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அடிப்படை பணியாளர்களை பழிவாங்க கூடாது. டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களின் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. அடிப்படை செலவினங்களுக்கு கூட கஷ்டப்படுகிறார்கள். எனவே டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை நிர்வாகமே நேரடியாக வந்து பெற்றுச்செல்லவேண்டும். 

 

தமிழக அரசு நேரடியாக தலையிட்டு அரசுக்கு மூன்றில் ஒரு பங்கு வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் பணிகளையும், குறைகளை களைய வேண்டும் டாஸ்மாக் நிர்வாகத்தின் வரவு செலவு மற்றும் நிதி குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். கடந்த ஆட்சியில் எம்பிஏ படித்து விட்டு வந்து தேர்வு இல்லாமல் முறைகேடாக அமர்த்தப்பட்ட அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்களை துன்புறுத்தி பணம் வாங்குவதில் குறியாக இருப்பதால் தமிழக அரசு இந்த பதவிக்கு தேர்வு நடத்தி உரிய நபர்களை தேர்வு செய்ய வேண்டும். அதிகாரிகளின் தூண்டுதலால் அன்றாட செலவுகளுக்கு மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியுள்ளது. அதிகாரிகளுக்கு கையூட்டு பணம் கட்டுவதற்காக கூடுதலான விலைக்கு மதுபான பாட்டில்களை விற்க வேண்டி இருப்பதாகவும் இவற்றை சரிப்படுத்த அதிகாரிகளை மேலிருந்து சீர்திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.