ராகுல்காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இழந்த தனது எம்.பி பதவியை திரும்பப்பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நீதி வென்றுள்ளது. சகோதரர் ராகுல் காந்தியை வயநாடு தொகுதி மீண்டும் தக்க வைக்கிறது. நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான நம்பிக்கையை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.