அரசுப்பள்ளியில் தரமான கல்வியை வழங்குவதில் இந்தியத் துணைக்கண்டத்திற்கே தமிழகம் முன்னோடியாக விளங்குவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என மொத்தம் உள்ள 37,557 பள்ளிகளில் புதிய மேலாண்மை குழுக்கள் செயல்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் இருபது பேர் இடம்பெறவுள்ளனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 'நம் பள்ளி நம் பெருமை' என்ற பெயரில் சென்னை திருவல்லிக்கேணியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "குழந்தைகளின் கல்வி ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம். அவர்களுக்கு அளிக்கப்படும் தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்திற்கான திறவுகோல். கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத சொத்து. பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம்" எனத் தெரிவித்தார்.