Skip to main content

“முதலமைச்சர் இதனை மாற்றிக்கொள்ள வேண்டும்” - அர்ஜூன் சம்பத்  

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

“The Chief Minister should change this” - Arjun Sampath

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாநகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று அவற்றை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 80 அடி சாலையில் மாலையில் ஊர்வலமாக ஆட்டம், பாட்டத்துடன் புறப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த ஊர்வலம் புறப்பட்டு கோவை சாலை, ஜவஹர் பஜார், 5 ரோடு வழியாக வாங்கல் காவிரி ஆற்றில் கரைக்க ஊர்வலமாக சென்றனர். இதில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “தமிழக முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் பொதுவானவர். திமுக தலைவராக இருந்தால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் செல்ல தேவையில்லை. தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும். இந்துக்களை முதல்வர் புறக்கணிக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. இதை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்துக்களை புறக்கணிப்பதுடன், கைது செய்யப்படுகிறார்கள். 

 

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அகண்ட காவிரியாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அவற்றை சேமிக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலந்து வீணாகிறது. நெல் மூட்டைகள் வீணாக மழையில் நனைந்து வீணாகிறது. அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட வேண்டும். அரசு நிவாரணப் பணிகளை செயல்படுத்த வேண்டும். வெள்ள நீரை நீர் நிலைகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அழைத்து வந்து தமிழகத்தில் அரசு மாடல் பள்ளிகளை திறக்க வைக்கின்றனர். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மும்மொழி கொள்கை, நவோதயா பள்ளிகள், புதிய கல்விக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். ஆனால், தமிழகத்தில் இதை எதையும் அனுமதிப்பதில்லை. தமிழக அரசு தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை உடனடியாக அனுமதிக்க வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இந்த அரசு அவற்றை பாதுகாக்க வேண்டும். மேலும், தமிழகத்திற்கு ராகுல் காந்தி வருகை தர உள்ளார். சிறுபான்மையாக இந்துக்கள் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அங்குள்ள கிருஸ்துவ மஷினரிகள் வெளி நாடுகளில் இருந்து நிதிகளை பெற்று அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராகுல் காந்தி காங்கிரஸ் இந்திய காந்தி காங்கிரஸ் அல்ல, சோனியா காந்தி காங்கிரஸ். பொதுமக்களை ஏமாற்ற இங்கு வருகை தருகிறார். ராகுல் கோபேக் என்ற முழக்கத்துடன் வரும் 7ம் தேதி தமிழக முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்