தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இன்று (23.08.2021) நீர்வளத்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அத்துறையின் அமைச்சர் துரைமுருகனை வெகுவாக பாராட்டினார். இதுதொடர்பாக பேசிய அவர், "நூறாண்டு வரலாறு கொண்ட இந்தச் சபையில் 50 ஆண்டு காலம் உறுப்பினராக இருப்பவர் அண்ணன் துரைமுருகன். 50 ஆண்டுகளாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்றுவருகிறார். இந்த மன்றத்தை அலங்கரித்துவரும் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவர். கட்சிக்கும் ஆட்சிக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்துவருபவர். கலைஞர், பேராசிரியர் அன்பழகன் இடத்தில் அவரை நான் பார்க்கிறேன். அவரது ஆலோசனை இந்த மன்றத்திற்குத் தொடர்ந்து தேவை" என்றார்.