சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூபாய் 389.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சென்ட்ரல் ஸ்கொயர் (Central Square) திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08/10/2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) / சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் கீழ் 31 மாடிகளுடன் சென்ட்ரல் பிளாசா கட்டடமும் கட்டப்பட்டுவருகிறது. சென்ட்ரல் பிளாசா கட்டடத்தின் கீழ் தளத்தில் 500 கார், 1000 பைக் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது.
சென்ட்ரல் ஸ்கொயரைத் தொடர்ந்து கத்திப்பாரா நகர்ப்புற ஸ்கொயர் கட்டுமான பணிகளையும் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். சுமார் 14 கோடி மதிப்பிலான கத்திப்பாரா நகர்ப்புற ஸ்கொயர் கட்டுமான பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் நடக்கும் போரூரிலும் அவர் ஆய்வு செய்தார்.