Advertisment

“உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” - மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Chief Minister M.K.Stalin's letter to the Union Minister for fishermen issue

எல்லை தாண்டி பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 17 மீனவர்கள், நேற்று இரவு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 17 மீனவர்களையும் இலங்கை படை கைது செய்தது. அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த கடிதத்தில், ‘இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள், இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (24-12-24) சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 20.12.2024 அன்று இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்களால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இருவேறு சம்பவங்களையும் கவனத்தில் எடுக்க கொள்ள வேண்டும்.

Advertisment

இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில், இரண்டு நாட்டுப் படகுகளில் பயணித்த ஆறு மீனவர்களில், மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும், இந்தத் தாக்குதலின்போது, மீனவர்களது மீன்பிடிப் படகுகளில் இருந்த ஜிபிஎஸ் (GPS) கருவிகள், விஹெச்எஃப் (VHF) கருவிகள், மீன்பிடி வலை, கையடக்கத் தொலைபேசி மற்றும் அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அடிக்கடி நடக்கும் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும், ஆபத்தையும் ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்களும், தாக்குதல்களும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Fishermen jaisankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe