fishermens Chief Minister MK Stalin's wrote a letter for chief minister of tamilnadu

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு இன்று (04/08/2021) எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமேற்பட்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், ஒன்பது மீனவர்களும் இந்தத் தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாகத் தப்பியுள்ளனர்.

Advertisment

சர்வதேச சட்டங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இந்தச் சம்பவம், தமிழ்நாட்டில் - குறிப்பாககடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கை கடற்படை சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்ய வேண்டியது நமது கடமையாகும்.

எனவே, இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதலமைச்சர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.