Chief Minister MK Stalin who met Vaiko in person and inquired about his health!

Advertisment

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, கடந்த ஜனவரி மாதம் கரோனா மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது, இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்தார். எனினும், நேரடி அரசியல் நிகழ்வுகள் மற்றும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்காமல், வைகோ தவிர்த்து வந்தார். வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21/02/2022) மாலை சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த நிகழ்வில் தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடனிருந்தார். முன்னதாக, வீட்டு வாசலில் முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து துரை வையாபுரி வரவேற்றார்.

Advertisment

இச்சந்திப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "திராவிட இயக்கப் போர்வாளாக விளங்கும் அண்ணன் வைகோ கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். கொள்கை மறவராக விளங்கும் அவரது பொதுவாழ்வு மேலும் சிறக்க விழைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.