Skip to main content

முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஈரோடு வருகை...! - அமைச்சர் சு.முத்துச்சாமி தகவல் 

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

Chief Minister MK Stalin to visit Erode soon ...! - Minister S. Muthuchamy

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் விவசாயிகள் விளைவித்த நெல்லினை அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் ஈரோடு வைராபாளையம், மற்றும் பி.பி. அக்ரஹாரம் ஆகிய இரண்டு இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களைத் திறக்கும் நிகழ்வு இன்று (22ஆம் தேதி) ஈரோடு வைராபாளையத்தில் நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து வைத்தார். தொடர்ந்து தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் ரூ. 46.77 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் அங்கு நடந்தது. விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை முத்துசாமி வழங்கினார். 

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் மையத்திற்கு கொண்டு வரும் அனைத்து நெல்களையும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2060  வழங்கப்படுகிறது. தனியார் நெல் கொள்முதல் நிலையங்களை காட்டிலும் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் 60 காசுகள் கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உழவர்களின் நலன் காக்கும் வகையில் வேளாண்துறை சார்பில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பராமரிப்பிற்காக  மரம் ஒன்றுக்கு ரூ. 7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு தரப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து மட்டுமே இங்கு நெல் கொள்முதல் செய்யப்படும் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படாது.

 

காலிங்கராயன் பாசன பகுதியில் இரண்டு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப மேலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யும்போது விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.

 

அரசு நிர்ணயித்துள்ள ஈரப்பதத்தின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும். பொட்டாஸ் உரம் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்கள் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதி கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில் யாரும் செல்லாத வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும். அனுமதி கிடைத்தவுடன் அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும். 

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்காகவும் விரைவில் ஈரோட்டுக்கு வருகை தர உள்ளார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.