Chief Minister MK Stalin trip to Delhi today

டெல்லியில் பிரதமர் மோடியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (26.09.2024) மாலை 5 மணிக்குச் சென்னையில் இருந்து விமானம் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அதனைத் தொடர்ந்து நாளை (27.09.2024) காலை பிரதமர் மோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். அப்போது சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துகிறார். அதோடு ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மேலும் தமிழகத்திற்கான வரி நிலுவைகள், கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் முதல்வரின் இந்த பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு எட்டு மணிக்குச் சென்னை திரும்புகிறார்.