சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து இறந்த தலைமை போக்குவரத்து காவலரின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று (02.11.2021) காலை சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்த விபத்தில், கவிதா என்ற போக்குவரத்து தலைமைக் காவலர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவரின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.