Chief Minister M.K. Stalin order Allocation of Rs. 500 crores to restore water bodies 

ஊரகப்பகுதிகளில் 5 ஆயிரம் நீர்நிலைகளைப் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, நீர் நிலைகளைத் தூர்வாரி, மழைநீரைச் சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

Advertisment

இதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22 ஆயிரத்து 51 சிறு பாசன ஏரிகளில் முதற்கட்டமாக நடப்பாண்டில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் சிறு பாசன ஏரிகளைப் புனரமைப்பதற்காகக் கடந்த 5ஆம் தேதி (5.9.2024) அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிறு பாசன ஏரிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தித் தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல், உபரி நீர் போக்கி (கலிங்கு), மதகு போன்ற அனைத்துக் கட்டமைப்புகளையும் பழுதுபார்த்தல் அல்லது புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களைத் தூர்வாருதல் ஆகியவற்றைப் பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Advertisment

Chief Minister M.K. Stalin order Allocation of Rs. 500 crores to restore water bodies 

இந்த நீர்நிலைகளைப் புனரமைப்பதால், நீர்நிலைகளின் கொள்திறன் அதிகரிக்கும், நிலத்தடி நீர் மட்டம் உயரும், வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படும், உபரி நீர் வீணாவதையும் தடுக்கும். சிறு பாசன ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்திப் புனரமைப்பதன் மூலம் வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தடுக்கும். பேரிடர் மேலாண்மை முயற்சிகளுக்கு இத்திட்டம் முக்கிய பங்களிப்பு வழங்கும். மேம்படுத்தப்படும் ஏரிகளில் தேவைப்படும் கட்டுமானப் பணிகளான வரத்து மற்றும் போக்குக் கால்வாய், கலிங்கு, மதகு மறுசீரமைக்கும் பணிகள் தேவைப்படின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்படும். சிறு பாசன ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தி, பசுமைச் சூழலை ஏற்படுத்தப் பனை மற்றும் உள்ளூர் வகை மரக்கன்றுகள் நடப்படும்.

இத்திட்டம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் மற்றும் மீதமுள்ள சிறு பாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் பணிகள் நிறைவேற்றப்படும். ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்ந்து சிறு பாசன ஏரிகளின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்பு இல்லாத பட்சத்தில், புதியதாகப் பயன்பாட்டாளர்கள் குழுக்கள் அமைத்துப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment