Skip to main content

தமிழக சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

Chief Minister MK Stalin made important announcements in the Tamil Nadu Legislative Assembly!

 

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,24,000 பேர் பயன்பெற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் 30 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் 56,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சமூக பாதுகாப்பு வளைகாப்புத் திட்டத்தின் கீழ் 96,000 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர். 1.71 லட்சம் மீனவக் குடும்பங்கள் 5,000 ரூபாய் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். ஊரகப் பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 14.32 லட்சம் ஆகும்.

 

68,800 பேர் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். 14,83,961 பேருக்கு கடந்த ஓராண்டில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 63,077 காவலர்கள் ஒருநாள் விடுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். 1.85 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ரூபாய் 80 கோடி செலவில் 4,694 கி.மீ. தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம், மாவட்டங்களில் புத்தகச் சந்தைகள் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 

 

காவல் ஆணையம், பொருநை அருங்காட்சியகம், மீண்டும் மஞ்சப்பை இயக்கம் ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஓராண்டில் 70% திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 70% நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். சொன்னதைச் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் கடந்த ஓராண்டில் நிறைவேற்றியிருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாமும் என்பதே திராவிட மாடல்; அதுவே இந்த அரசின் நோக்கம். 

 

ஆவடியில் நரிக்குறவர் இல்லத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட உணவு காரமாக இருந்தாலும், அதில் அன்பு வெளிப்பட்டது. கறிக்குழம்பு காரமாக இருந்ததால் தான் கரோனா வரவில்லை என நரிக்குறவர் மக்கள் தெரிவித்தனர். சமூக நோய்களில் இருந்து காப்பாற்றும் காரமான அரசு இந்த அரசு. மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதே எனது கவலை. 

 

அரசுப் பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும். இந்த திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்படும்; ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கும் வகையில் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்; மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். தமிழகம் முழுவதும் சுமார் ரூபாய் 150 கோடி செலவில் 'தகைசால்' பள்ளிகள் அமைக்கப்படும். 

 

அனைத்து நவீன வசதிகளுடன் பள்ளிகள் அமைக்கப்படும்; மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும். மக்களின் இருப்பிடம் அருகே தரமான மருத்துவ வசதிகளை வழங்க 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 234 தொகுதிகளிலும் 'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்' செயல்படுத்தப்படும். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்பட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திட்டம் சமமாக செயல்படுத்தப்படும்." இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.