
செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரி அருகே 81 பழங்குடியின குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில் பழங்குடியினர், நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இப்பகுதியில் இருக்கும் மக்கள் நீண்ட நாட்களாக தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று போராடிவந்தனர். இந்நிலையில், இன்று அங்குள்ள 81 குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கினார். மேலும், அவர்களுக்கு பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் இருளர் ஆகிய சாதி சான்றிதழ்களையும் வழங்கினார். இவர்களுக்கு சுயதொழில் பயிற்சி திட்டம் மற்றும் கடன் உதவியும் வழங்கப்பட்டது. அதேபோல், அந்த மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அங்கன்வாடி மற்றும் வகுப்பறைகள் கட்டித்தருவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் அடிப்படை வசதியான, சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவற்றையும் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பூஞ்சேரி பகுதியில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, அஸ்வினி எனும் நரிக்குறவர் பெண் வீட்டிற்குச் சென்று அவரிடம் கலந்துரையாடினார்.

சமீபத்தில், கோயில் அன்னதானத்தில் இருக்கை மறுக்கப்பட்டு,அதுகுறித்து அஸ்வினி பேசிய வீடியோ பெரும் வைரலானது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அவருடன் அமர்ந்து கோயில் அன்னதானத்தைச் சாப்பிட்டார். இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரியில் உள்ள 81 பழங்குடியினர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய 81 குடும்பத்தில் அஸ்வினியின் குடும்பம் ஒன்று. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டுச் சென்றார். இந்நிகழ்வின் போது, அஸ்வினியும் அவரது குழந்தையும் முதலமைச்சரின் காலில் விழ வந்தனர். அப்போது அவர்களைத் தடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காலில் எல்லாம் விழக்கூடாது” என்று தெரிவித்தார். அதேபோல், இன்று காலை பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியிலும் பலர் மேடையில் அவரது காலில் விழ முற்பட்டபோது இதையே அவர்களுக்கும் அறிவுறுத்தினார்.